மாற்கு
ஆசிரியர்
ஆதி சபைப்பிதாக்கள், இந்த புத்தகத்தை யோவான் மாற்கு எழுதியதாக பொதுவாக ஒத்துக்கொள்கிறார்கள். யோவான் மாற்கு, புதிய ஏற்பாட்டில் பத்து முறை குறிப்பிடப்படுகிறார் (அப்போஸ்தலர் 12:12, 25, 13:5, 13, 15:37, 39; கொலோசெயர் 4:10, 2 தீமோத்தேயு 4:11, பிலேமோன் 24, 1 பேதுரு 5:13). மாற்கு, பர்னபாவின் உறவினர் என்பதை இந்த குறிப்புகள் குறிக்கிறது (கொலோ. 4:10). மாற்குவின் தாயின் பெயர் மரியாள், அவள் செல்வ செழிப்பு உள்ளவளும் எருசலேமில் மதிப்பிற்குரியவளாகவும் இருந்தாள். அவர்களின் வீடு ஆரம்ப கிறிஸ்தவர்கள் கூடிவருகிற ஒரு இடமாக இருந்தது (அப்போஸ்தலர் 12:12). பவுலின் முதல் மிஷனரி பயணத்தில் யோவான் மாற்கு பவுலோடும் பர்னபாவோடும் சேர்ந்தார் (அப்போஸ்தலர் 12:25, 13:5). வேதாகம ஆதாரங்கள் மற்றும் ஆரம்பகால சபைப்பிதாக்களின் குறிப்புக்கள் பேதுரு மற்றும் மாற்கு இடையே நெருங்கிய தொடர்பைக் காட்டுகின்றன (1 பேதுரு 5:13). அவர் பேதுருவின் மொழிபெயர்ப்பாளராக இருந்தார். பேதுருவின் பிரசங்கம் மற்றும் அவருடைய கண்கண்ட சாட்சிகள் ஆகியன மாற்கு சுவிசேஷத்திற்கு முக்கிய ஆதாரமாக இருந்திருக்கலாம்.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிபி 50-60. காலத்தில் எழுதப்பட்டிருக்கலாம்.
மாற்கு நற்செய்தி ரோமில் எழுதப்பட்டிருப்பதாக சபைப்பிதாக்களின் (ஐரெனீயஸ், அலெக்ஸாண்டிரியாவின் கிளெமெண்ட் மற்றும் பிறர்) புத்தகங்கள் உறுதிப்படுத்துகின்றன. பேதுருவின் மரணத்திற்கு (கிபி 67-68) பின்னர் நற்செய்தி எழுதப்பட்டதாக ஆரம்பகால சபை ஆதாரங்கள் கூறுகின்றன.
யாருக்காக எழுதப்பட்டது
மாற்கு, நற்செய்தியை பொதுவாக புறசாதி மக்களுக்காகவும், குறிப்பாக ரோம வாசகர்களுக்காகவும் எழுதியுள்ளார் என்று சான்றுகள் மற்றும் ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன. இது இயேசுவின் வம்சாவளியை உள்ளடக்கியது அல்ல, காரணம் புறசாதி உலகமானது மிகக் குறைந்த அளவே புரிந்திருந்தது.
எழுதப்பட்ட நோக்கம்
மாற்கின் வாசகர்கள் குறிப்பாக ரோமானிய கிறிஸ்தவர்கள் கிபி. 67-68 ல் பேரரசர் நீரோ ஆட்சியின் கீழ் கடுமையான துன்புறுத்தல் மத்தியில் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். அத்தகைய சூழ்நிலையில் மாற்கு இத்தகைய கடினமான காலங்களிலிருந்த கிறிஸ்தவர்களை ஊக்குவிக்க துன்பகரமான ஊழியராக இயேசுவை சித்தரித்து (ஏசாயா 53) இந்த நற்செய்தியை எழுதினார்.
மையக் கருத்து
இயேசு பாடு அனுபவிக்கும் ஊழியர்
பொருளடக்கம்
1. வனாந்தரத்தில் ஊழியத்திற்கான இயேசுவின் ஆயத்தம் — 1:1-13
2. கலிலேயாவைச் சுற்றிலும் உள்ளேயும் இயேசுவின் ஊழியம் — 1:14-8:30
3. இயேசுவின் ஊழியம்: துன்பமும் மரணமும் — 8:31-10:52
4. எருசலேமில் இயேசுவின் ஊழியம் — 11:1-13:37
5. சிலுவை பாடுகளின் வர்ணிப்பு — 14:1-15:47
6. இயேசுவின் உயிர்த்தெழுதல் மற்றும் தரிசனமும் — 16:1-20