1 நாளாகமம்
ஆசிரியர்
1. நாளாகமம் புத்தகத்தின் ஆசிரியர் யார் என்று தெளிவாக குறிக்கப்படவில்லை. ஆனால் வேதபாரகன் எஸ்றா தான் என்று யூத பாரம்பரியம் சொல்லுகிறது. இஸ்ரவேல் குடும்பத்தின் பெயர் அட்டவனையுடன் இந்த புத்தகம் தொடங்குகிறது. பிறகு ஐக்கிய இராஜ்ஜியமாக இருந்த இஸ்ரவேலின் மேல் தாவீது செய்த அரசாட்சியை வர்ணிக்கிறது. பழைய ஏற்பாட்டின் உயர்ந்த நபரான தாவீதின் காரியங்களை அதிவிவரமாக எழுதுகிறது. பண்டைக்காலத்து இஸ்ரவேல் தேசத்தின் மதசம்பந்தமான காரியங்களையும் அரசியல் காரியங்களையும் விவரிக்கிறது.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிமு. 450 க்கும் 400 க்கும். இடையில் எழுதப்பட்டது.
3:19-24, வசனங்களின் அட்டவணையில் தாவீதின் ஆறாவது தலைமுறையிலுள்ள செருபாபேலின் பெயர் குறிக்கப்பட்டிருப்பதால் இந்த புத்தகம் பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தபிறகு எழுதப்பட்டது என்று உறுதியாகிறது.
யாருக்காக எழுதப்பட்டது
பண்டைக்காலத்து யூத ஜனங்களுக்கும் வேதத்தை வாசிக்கிற அனைவருக்கும் எழுதப்பட்டது.
எழுதப்பட்ட நோக்கம்
சிறையிருப்புக்கு பிறகு திரும்பி வந்த இஸ்ரவேலர்கள் தேவனை எப்படி ஆராதிக்க வேண்டும் என்று அறிய எழுதப்பட்டது. இஸ்ரவேலின் தெற்கு இராஜ்ஜியமான யூதா, பென்யமின் லேவி கோத்திரங்களின் சரித்திரத்தில் அதிகமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த கோத்திரங்கள் தேவனுக்கு அதிக உண்மையுள்ளவர்களாக காணப்பட்டனர். தாவீதின் வீடும் சிங்காசனமும் என்றைக்கும் இஸ்ரவேலில் நித்தியமாக ஸ்திரப்பட்டிருக்கும் என்று தாவீதோடு செய்த உடன்பட்டிக்கையை தேவன் கனம்பண்ணுகிறதைக் குறிக்கிறது. இதை பூமியின் இராஜாக்கள் செய்யமுடியாது, தேவனே மக்கள் தம்மை ஆராதனை செய்ய தம்முடைய ஆலயத்தை ஸ்திரப்படுத்தினார். பாபிலோனியர்களின் சேனைகள் சாலொமோன் கட்டின தேவாலயத்தை அழித்தார்கள்.
மையக் கருத்து
இஸ்ரவேலின் ஆவிக்குரிய சரித்திரம்
பொருளடக்கம்
1. வம்சவரலாறுகள் — 1:1-9:44
2. சவுல் இராஜாவின் மரணம் — 10:1-14
3. தாவீதின் அபிஷேகமும் இராஜ்ஜியாபாரமும் — 11:1-29:30