ஆதியாகமம்
ஆசிரியர்
இந்த புத்தகத்தின் ஆசிரியரும் பஞ்சாகமத்தின் மற்ற நான்கு புத்தகங்களும் இஸ்ரவேலின் தீர்க்கதரிசியான மோசேயினால் எழுதப்பட்டது என்று யூத பாரம்பரியம் சொல்லுகிறது. இவன் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்து தேசத்திலிருந்து மீட்டவன். எகிப்தின் அரண்மனையில் கற்பிக்கப்பட்டவன், அப்போஸ்தலர் 7:22. யெகோவா தேவனுடன் நெருங்கிய தொடர்புகொண்டவன். இயேசுவும், இயேசுவின் காலத்தில், இருந்த பரிசேயர்களும் சதுசேயர்களும் பஞ்சாகமத்தின் ஆசிரியர் மோசே தான் என்று உறுதிப்படுத்தினார்கள். யோவான் 5:45-47, மத்தேயு 19:7, 22:24.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கி. மு. 1446 க்கும் 1405 க்கும். இடையில் எழுதப்பட்டது.
இஸ்ரவேல் ஜனங்கள் சீனாய் மலை பகுதியில் பாளையம் இறங்கி இருந்த நாட்களில் எழுதப்பட்டு இருக்கலாம்.
யாருக்காக எழுதப்பட்டது
எகிப்திலிருந்து வெளி வந்து பாலைவனத்தில் இருந்த இஸ்ரவேல் ஜனங்களுக்கு.
எழுதப்பட்ட நோக்கம்
இஸ்ரவேல் தேசத்தின் குடும்ப வரலாறுகளை விவரித்துள்ளான் எகிப்தின் அடிமைத்தனத்தில் இஸ்ரவேல் தேசம் உருவான விதத்தையும், கானான் தேசம், வாக்குதத்தம் பண்ணப்பட்ட தேசம் தான் என்றும், இஸ்ரவேல் ஜனங்களுக்கு எகிப்தில் உண்டான உபத்திரவங்கள் தற்செயலாய் ஏற்பட்டது அல்ல, அவைகள் தேவனால் முன்பே திட்டமிட்டவைகள் என்றும், உலகங்களையும் பூமியையும் சிருஷ்டித்தவர்தான் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபின் தேவன் என்று விவரித்து எழுதியிருக்கிறான். யாத்திராகமம் 1:8, ஆதி 17:8, 15:13-16; 50:20, யாத்திராகமம் 3:15-16. இஸ்ரவேலின் தேவன் மற்ற ஜனங்களின் தெய்வங்களைப்போல் அல்ல அவர் உன்னதமானவர் என்பதை அறியவேண்டும் என்று எழுதினான்.
மையக் கருத்து
ஆரம்பங்கள்.
பொருளடக்கம்
1. சிருஷ்டிப்பு — 1:1-2:25
2. மனிதனின் பாவம் — 3:1-24.
3. ஆதாமின் வம்சவரலாறு — 4:1-6:8.
4. நோவாவின் வம்சவரலாறு — 6:9-11:32.
5. ஆபிரகாமின் வரலாறு — 12:1-25:18.
6. ஈசாக்கும் அவனுடைய குமாரர்களின் வரலாறும் — 25:19-36:43.
7. யோசேப்பின் வம்சவரலாறு — 37:1-50:26.